
தமிழர்களை நிர்வாணப்படுத்தி மிருகத்தனமாக இலங்கைப் படையினர் சுட்டுக் கொல்வது போன்ற காட்சி அடங்கிய வீடியோ உண்மையானதே என்று அமெரிக்காவைச் சேர்ந்த இன அழிப்புக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட தடவியல் சோதனையில் இது நிரூபிக்கப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எங்கள் முதல் கட்ட அறிக்கையின்படி இந்த வீடியோ உண்மையானது என்று தெரிகிறது. எந்த வகையிலும் இது திருத்தப்பட்டதோ அல்லது வேறு வீடியோ அல்லது ஆடியோ இதில் இணைக்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
வீடியோ காட்சிகள் தொடர்ந்து வருகின்றன. வீடியோவை நிறுத்தி காட்சிகளை சேர்த்ததற்கான ஆதாரமோ அல்லது காட்சிகளை நீக்கியதற்கான ஆதாரமோ எதுவும் இல்லை. ஆரம்ப கட்ட ஆய்வில் 10-க்கும் மேற்பட்ட விஷயங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
முதலில் இறந்தவரின் ரத்தமும், அடுத்து இறப்பவரின் ரத்தமும் நிறத்தில் மாறுபாடு தெரியும். இந்த வீடியோவிலும் அந்த மாறுபாடு தெரிகிறது. காயமாக இருந்தால் அந்த மாறுபாடு தெரியாது.
துப்பாக்கி சுடும்போது ஏற்படும் சத்தம், அலறல் சத்தம் ஆகியவை வெளிவருவதிலும் உரிய கால இடைவெளி தெரிகிறது.
முதலில் சுடப்பட்டவரின் கால் அசைவு அவர் இறக்காமல் துடிப்பதை உறுதி ஏற்படுத்துகிறது.
எனவே இந்த வீடியோ உண்மையானதுதான். ஆனாலும் இன்றும் ஆய்வு நடத்த வேண்டியது உள்ளது. நவம்பர் மாதம் இறுதியில் முழு அறிக்கை வெளியிடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி ஜெர்மனியைச் சேர்ந்த இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிக்கையாளர்கள் என்ற குழு சானல் 4 தொலைக்காட்சிக்கு இந்த வீடியோவை வழங்கியது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment