ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, May 7, 2010


தம்மை அழித்தவர்களை ஈழத் தமிழர் பழிவாங்க வேண்டும் - நிராஜ் டேவிட்

ஈழத் தமிழர் மீதான அழித்தொழிப்பு யுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு ஒரு ஆண்டு நெருங்கிக்கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்றில் என்றைக்குமே மறக்கமுடியாத நாட்கள் அவை.
ஈழத் தமிழர்கள் ஒரு மூலைக்குள் முடக்கப்பட்டு பட்டினி போடப்பட்டு இரசாயனக் குண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் துடிக்கத் துடிக்க அழிக்கப்படதான ஒரு நிகழ்வு சுமார் ஒரு வருடத்தின் முன்னர் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.
கைகளில் வெள்ளைக்கொடியை ஏந்தியபடி சரணடையச் சென்றவர்களைக் கூட சகட்டுமேனிக்குச் சுட்டுத்தள்ளிய கொடுரம் அரங்கேறியிருந்தது. போர்க்கைதிகளை படுகாயப்பட்ட போராளிகளை இரக்கமின்றி கொலை செய்த கொடுமை நடைபெற்றிருக்கின்றது. குழந்தைகள் வயது முதிர்ந்தவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் என்று எந்த பரிதாபமும் இல்லாமல் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகாமான அப்பாவித் தமிழ் மக்களை முற்கம்பி வேலிகளுக்குள் அடைத்து தனது வெற்றியைக் கொண்டாடிய அசிங்கம் எமக்கு நிகழ்ந்திருந்தது.

11 ஆயிரத்திற்கும் அதிகமான எமது உறவுகளை யாருடைய கண்களுக்கும் தெரியாமல் இன்னமும் சிறைகளுக்குள் மறைத்து வைத்து சித்திரவதை செய்து தமது காழ்ப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றது சிறிலங்கா தேசம்.

எம்மீதான இத்தனை கொடுமைகள் புரியப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகின்றது. இந்த ஒரு வருட காலத்தில்; எமது இனத்தின் மீது புரியப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக அல்லது இந்த அநீதிகளுக்குப் பதிலாக எமக்கு இழைக்கப்பட்ட அவமானங்களுக்கு எதிராக நாம் என்ன செய்திருக்கின்றோம்?

மாவிலாறு முதல் முள்ளிவாய்கால் வரை அநியாயமாக மரணித்த எமது உறவுகளின் ஆத்மாக்கள் சாந்தி அடைய நாம் என்ன செய்திருக்கின்றோம்?

புலம்பெயர்ந்த நாடுகளின் தெருக்களில் நின்று கோஷம் போட்டிருக்கின்றோம். எம் தலைவன் காட்டிய வழியில் தொடர்ந்து நடப்போம் என்று இணையத் தளங்களிலும் வானொலி தொலைக்காட்சிகளிலும் வீர வசனம் பேசி இருக்கின்றோம் ஐ.நாவுக்கும் ஒபாமாவுக்கும் கடிதங்கள் போட்டிருக்கின்றோம். எம்மோடு உடன் இருந்த சிலருக்கு துரோகப்பட்டம் கட்டியிருக்கின்றோம் பல உயரிய தியாகங்களை மறைத்து அந்தத் தியாகங்களைக் கொச்சைப்படுத்தியிருக்கின்றோம். முழு மூச்சாக த.தே.கூட்டமைப்பை பிழவுபடுத்தியிருக்கின்றோம்;. நடிகர் விஜய்யின் படத்தை புறக்கணித்து இருக்கின்றோம். இலங்கைக்கு ஒரிரு தடவைகள் இரகசியமாகப் போய் வந்திருக்கின்றோம். புதிய புதிய இணையத் தளங்களைத் திறந்து ஒருவர் மீது ஒருவர் காறி உமிழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

இவற்றைத் தவிர எமது இனத்தின் மீது புரியப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக கடந்த ஒரு வருட காலத்தில் நாம் வேறு ஏதாவது செய்திருக்கின்றோமா என்று யாராவது கேட்டால் சிறிது நேரம் யோசித்துப் பார்த்துவிட்டு இல்லை என்றுதான் பதில் கூறவேண்டி இருக்கின்றது.

ஆம். எமது இனத்தின் மீதான ஒரு அழித்தொழிப்பு யுத்தம் நடைபெற்றிருக்கின்றது. எமது இனத்தின் மீதான ஒரு அப்பட்டமான இன அழிப்பு நடைபெற்றிருக்கின்றது. எமது இனத்தை கருவறுத்தவர்களை பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் எமக்கு ஏற்படவில்லை என்றால் ஒரு இனம் என்று கூறிக்கொள்ளும் தகுதியை நாம் நிச்சயம் இழந்தவர்களாகிவிடுவோம்.

இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வி எழலாம்.
எங்களால் என்ன செய்ய முடியும்? எங்களின் பலம்தான் அழிக்கப்பட்டுவிட்டதே? இனி எங்களால் எதைத்தான் செய்யமுடியும்? - இவ்வாறு நீங்கள் கேள்வி எழுப்பலாம்.

எங்களிடம் இல்லாத பலத்தைப் பற்றிக் கவலைப்படாமல்;. எங்களிடம் இருக்கின்ற பலத்தை வைத்துக்கொண்டு அந்த யுத்தக் குற்றவாளிகளை எப்படி பழிவாங்கலாம் என்று யோசிப்பதுதான் சாலச்சிறந்தது.

அப்படி என்னதான் பலம் எங்களிடம் இருக்கின்றது? எங்களை அழித்த பலவான்கனை பழிவாங்கக் கூடிய அளவிற்கு என்ன பலம் எங்களிடம் இருக்கின்றது?

அண்மையில் புலம்பெயர் நாடொன்றில் நடந்த சில சம்பவங்களை மாத்திரம் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக் காண்பிக்கின்றேன். அதன் பின்னர் எங்கள் இனத்தின் மீது கொடுமை புரிந்தவர்களை எங்களிடம் இருக்கின்ற சிறிய பலத்தை வைத்துக்கொண்டு எப்படி எங்களால் பழிவாங்க முடியும்; என்று உங்களுக்கு நன்றாகவே புரியும் என்று நான் நம்புகின்றேன்.

கடந்த டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் திருமதி சிப்பி லிவினி(Tzipi Livni ) பிரித்தானியாவுக்கு பயணமாக இருந்த நேரத்தில் அவருக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி கிடைத்தது.

பிரித்தானியாவில் வைத்து அவரைக் கைதுசெய்வதற்கான பிடியானையை பிரித்தானிய நீதிமன்றம் பிறப்பித்திருப்பதான செய்தி அவருக்குக் கிடைத்தது.

இஸ்ரேலின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் அனைவருக்குமே அது ஒரு பெரிய அதிர்சியை ஏற்படுத்தியிருந்தது.

Tzipi Livni ஒரு சாதாரணமான பெண் அல்ல. இஸ்ரேல் தேசத்தின் அரசியலில் ஒரு முக்கிய அங்கம் வகிப்பவர்.

இஸ்ரேலின் எதிர்கட்சித் தலைவர்.

அவர் மீதான கைது ஆணையை அதுவும் இஸ்ரேலின் மிக முக்கிய நட்பு நாடான பிரித்தானியாவின் நீதிமன்றம் பிறப்பித்திருப்பது ஒரு பெரிய அதிர்ச்சியை இஸ்ரேலின் அனைத்து மட்ட அரசியல் மற்றும் நிர்வாகத் தலைவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.

எதற்காக இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் மீது லண்டன் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது?

2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் திகதி இஸ்ரேலின் காசாப் பிரதேசம் மீது இஸ்Nலியப் படைகள் ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. காஸ்ட் லீட் படை நடவடிக்கை (Operation Cast Lead) என்ற பெயரில் இஸ்ரேலிய முப்படைகளும் இணைந்து மேற்கொண்ட அந்த நடவடிக்கை மிகப் பெரிய அவலத்தை காசாப் பகுதியில் ஏற்படுத்தியிருந்தது. காசாப் பகுதியில் இருந்து இஸ்லாமிய கமாஸ் போராளிகள் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் முகமாகவே இஸ்ரேலியப் படைகள் இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்கள்:

2008 டிசம்பர் 27ம் திகதி முதல் 2009ம் ஆண்டு ஜனவறி மாதம் 18ம் திகதி வரை நடைபெற்ற இஸ்ரேலின் அந்த மூன்றுவார இராணுவ நடவக்கையில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 1400 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார்கள். 50ஆயிரம் பலஸ்தீனர்களின் வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டன.

காசாப் பகுதி மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட அந்த படை நடவடிக்கையை உலகம் முழுவதும் கண்துடைப்பிற்காக கண்டித்திருந்தாலும் அமெரிக்கா பிரித்தானியா உட்பட மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே நிலைப்பாடு எடுத்திருந்தன.

இந்த இராணுவ நடவடிக்கையில் இஸ்ரேல் பாரிய போர் குற்றங்களைப் புரிந்ததாகவும் மனிதத்திற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் ஐ.நா. கடுமையான கண்டணத்தை வெளியிட்டிருந்தது. சிவிலியன் மீது இஸ்ரேலியப் படைகள் எறிகணை மன்றும் குண்டு வீச்சுக்களை திட்டமிட்டே மேற்கொண்டதாகவும் பொஸ்பரஸ் குண்டுகள் உட்பட தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை அந்த இராணுவ நடவடிக்கையில் இஸ்ரேலியப் படைகள் பாவித்ததாகவும் பலஸ்தீன மக்களை மனிதக் கேடயங்களாக இஸ்ரேலியப் படைகள் பாவித்ததாகவும் வைத்தியசாலைகள் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடாத்தியதாகவும் ஐ.நா. உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியிருந்தன. ஆனாலும் வெறும் கண்டனங்கள் என்பதற்கு அப்பால் இஸ்ரேலை எவராலும் எதுவும் செய்துவிடமுடியவில்லை.

உலகம் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்க இஸ்ரேலின் படைநடவடிக்கையில் பாதிக்கப்பட்டு பிரித்தானியாவுக்கு அகதிகளாக வந்த சில பலஸ்தீனர்களும் பிரித்தானியாவில் உள்ள சில பலஸ்தீன அமைப்புக்களும் இணைந்து பிரித்தானியாவின் சட்டத்தின் கீழ் இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் ஒன்றை மேற்கொண்டார்கள்: வழக்கை விசாரித்த பிரித்தானிய நீதிமன்றம் இஸ்ரேலின் Operation Cast Lead என்ற இராணுவ நடவடிக்கை இடம்பெற்ற காலப்பகுதியில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த Tzipi Livni இனைக் கைதுசெய்யும்படி பிடியானை பிறப்பித்தது. பிரித்தானிய மண்ணில் காலடி எடுத்துவைத்தால் அவரை உடனடியாகவே கைதுசெய்யும் நிலை இருந்தது.

இதேபோன்று காசாவிலும் மேற்குகரையில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் குற்றச் செயல்களுக்காக பிரித்தானியாவின் சட்டத்தில் காணப்படுகின்ற சில ஆரோக்கிமான சரத்துக்களைப் பயன்படுத்தி இஸ்ரேலியத் தலைவர்களை பிரித்தானியாவுக்குள் நுழையவிடாது சங்கடங்களை ஏற்படுத்தும் முயற்சிகளை பலஸ்தீன அமைப்புக்கள் அண்மைக் காலமாகவே மேற்கொண்டு வருகின்றன.

இதேபோன்று கடந்த ஒக்டோபர் மாதம் பிரித்தானியாவுக்கு விமானத்தில் வந்த இஸ்ரேலின் துணைப்; பிரதமர் மொஷா யாலோன் (Moshe Yaalon) விமானத்தை விட்டு பிரித்தானிய மண்ணில் கால்வைக்காமல் திரும்பிச் சென்ற சம்பவமும் இடம்பெற்றிருக்கின்றது. 2002 ஆம் ஆண்டு அவர் பாதுகாப்புத்துறை உயரதிகாரியாக பதவிவகித்த காலத்தில் காசாப்பகுதியில் இஸ்ரேலியப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதலில் கமாஸ் அமைப்பின் ஒரு முக்கிய தலைவரும் அவரது மனைவி மற்றும் ஒன்பது பிள்ளைகளும் கொல்லப்பட்டிருந்தார்கள். இந்தக் கொலை தொடர்பாக பிரித்தானியாவில் உள்ள சில பலஸ்தீனர்களால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தால் Moshe Yaalon இற்கு எதிராக பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரித்தானியப் பயணம் மேற்கொண்ட மொஷா யாலோன் (Moshe Yaalon) விமான நிலயத்தில் தரையிறங்கினால் கைதுசெய்யப்படும் நிலையில் வந்த விமானத்திலேயே திரும்பிச் செல்லவேண்டி ஏற்பட்டது.

இதேபோன்று காசாவில் பலஸ்தீனர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்குவதற்கு கட்டளையிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட டொரோன் அல்மொக் (Doron Almog) என்ற முன்னாள் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிக்கு எதிராக பிரித்தரியாவில் உள்ள பலஸ்தீன அமைப்பொன்று பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தது. 2005 இல் அவர் பிரித்தானியாவிற்கு பயணம் செய்த பொழுது லன்டன் கீட்துரோ (Heathrow) விமான நிலயத்தில் அவர் கைதுசெய்யப்படக்கூடிய சந்தர்ப்பம் இருந்ததால் விமானத்தை விட்டு இறங்காமல் அதே விமானத்தில் அவர் இஸ்ரேல் திரும்பவேண்டி ஏற்பட்டது.

இதேபோன்று பிரித்தானியாவின் 1988 Criminal Justice Act இன்படி இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எகூட் பாரக்கை (Ehud Barak) கைதுசெய்யும்படியான ஆணையை பிரித்தானியா நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும் என்று சில பலஸ்தீன அமைப்புக்கள் பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் செயற்படுகின்ற இது போன்ற சில பலஸ்தீன அமைப்புக்களின் செயற்பாடுகள் பல்வேறு இராஜதந்திரச் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் இஸ்ரேலுக்கு உருவாக்கி வருகின்றது.

இத்தனைக்கும் பிரித்தானியா இஸ்ரேலின் மிகப் பெரிய ஒரு நட்பு சக்தி. இஸ்ரேலின் அத்தனை அராஜகங்களையும் ஆசீர்வதித்து வருகின்ற ஒரு நாடுதான் பிரித்தானியா. பிரித்தானியாவில் உள்ள அனேகமான அரசியல் தலைவர்கள் அரசியல் கட்சிகள் அனைத்துமே இஸ்ரேலின் பக்கம்தான் நிற்கின்றார்கள். இஸ்ரேலியத் தலைவர்கள் மீது பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருப்பதை அவர்கள் அடியோடு எதிர்க்கின்றார்கள். ஆனாலும் பிரித்தானியாவின் நீதித்துறை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டு சுயாதீனமாகச் செயற்படுகின்றதான ஒரு நிலையில் உள்ளதைப் புரிந்துகொண்ட சில பலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்கு எதிராக பிரித்தானியாவின் நீதித்துறையை சரியான முறையில் பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகின்றார்கள்.

காசாவில் இஸ்ரேல் புரிந்ததாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களை விட அதிக அளவிலான மிக மோசமான யுத்தக் குற்றங்கள் அதே காலப்பகுதியில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாஙங்கத்தால் புரியப்பட்டிருக்கின்றது. இப்படியான யுத்தக்குற்றங்கள் புரியப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை பிரித்தானியாவை மையமாகக்கொண்ட பல தொலைக்காட்சிகள் நிரூபித்தும் இருக்கின்றன. பிரித்தானியாவின் நாடாளுமன்றம் உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் இதனைக் கண்டித்தும் இருக்கின்றன.

இன்று பிரித்தானியாவில் சுமார் மூன்று இட்சம் தமிழர்கள் வாழ்வதாக ஒரு கணிப்பீடு காண்பிக்கின்றது. ஈழத் தமிழரின் நலன்காக்கவென்று அங்கு பல அமைப்புகள் நிறுவனங்கள் செயற்பட்டும் வருகின்றன.

அப்படி இருந்தும் ஈழத் தமிழர்கள் மீதான ஒரு இன அழிப்பை மேற்கொண்ட கொலைகாரர்களுக்கு எதிராக ஏன் ஒரு வழக்கு கூட பிரித்தானிய நீதிமன்றத்தில் எம்மால் தாக்கல்செய்யமுடியவில்லை?

பேச்சுக்கள் அறிக்கைகளைக் கடந்து ஏன் எமது இனம் சார்ந்த அமைப்புக்களால் அடுத்தகட்டத்திற்கு நகர முடியவில்லை?

எமது உறவுகளை அழித்துவிட்டு அவர்களது பிணங்களின் மீது ஏறி நின்று வெற்றிப் பிரகடனம் செய்த எத்தனையோ சிறிலங்காத் தலைவர்கள் சிரித்தபடி எங்கள் முன்னால் வலம்வந்துகொண்டிருக்கின்றார்கள்.

நாங்கள் வாழுகின்ற நாடுகளில் உள்ள சட்டங்களை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஏன் அவர்களை நாங்கள் பழிவாங்கக்கூடாது?

Niraj David
nirajdavid@bluewin.ch

நன்றி: புதினப்பலகை

2 comments:

ஜோதிஜி said...

அவஸ்யமான தக்க நேரத்தில் வந்த நல்ல கருத்துக்கள்.

Unknown said...

//
ஜோதிஜி said...
அவஸ்யமான தக்க நேரத்தில் வந்த நல்ல கருத்துக்கள்.

//

repeatuuuuu

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil