
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்கா அரச படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது 40,000 பொது மக்கள் வரையில் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என ஐ.நா. சபையின் பேச்சாளராக கொழும்பில் முன்னர் பணிபுரிந்த கோர்டன் வைஸ் தெரிவித்திருக்கின்றார்.
வைஸ் தெரிவித்திருக்கும் இந்தத் தகவல்கள் கொழும்பில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
அவுஸ்திரேலியாவின் ஏ.பி.பி. நியூஸ் காணொலி நிறுனத்திற்கு வழங்கிய பேட்டி ஒன்றில், அனைத்துலக நாடுகளைத் தவறாக வழிநடத்தக்கூடிய தகவல்களை அல்லது பொய்களை அரசாங்கம் தெரிவித்தது எனவும் அவர் கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.
பொது மக்கள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக விடுதலைப் புலிகளும் அவர்களைக் கொலைசெய்ததாகவும் இந்தப் பேட்டியில் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஐ.நா. சபையில் 14 வருட காலமாகப் பணியாற்றிய கோர்டன் வைஸ், அந்தப் பதவியைத் துறந்துவிட்டு தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார்.
கடந்த மே மாத காலப் பகுதியில் இறுதிக் கட்டப் போரில் பெருந்தொகையான பொது மக்கள் கொல்லப்பட்ட கால கட்டத்தில் கொழும்பில் பணிபுரிந்த இவர் சர்ச்சைக்குரிய பல அறிக்கைகளை வெளியிட்டார்.
இதனால் சிறிலங்கா அரசாங்கம் இவரை வெளியேற்றுமாறு ஐ.நா.வைக் கேட்டுக்கொண்டிருந்தது.
பதவியிலிருந்து விலகியிருப்பதால் போர்க் காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக சுயாதீனமாகக் கருத்துக்களை வெளியிடக்கூடிய நிலையில் இருக்கும் இவர், வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் வெளிப்படையாகக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.
ஏ.பி.சி. நியூஸ் நிகழ்ச்சியில் பங்குகொண்டு கருத்து வெளியிட்ட அவர், கடந்த வருடத்தில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது 10,000 முதல் 40,000 வரையிலானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
"இந்தப் போரின் இறுதிப் பகுதியில் சுமார் மூன்று லட்சம் பொது மக்களும், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சோ்ந்தவர்களும் நியூ யோர்க் நகரில் உள்ள சென்றல் பார்க் அளவேயுள்ள சிறிய பகுதிக்குள் முடக்கப்பட்டனர்" எனத் தெரிவித்த அவர் -
"போரின் போது விடுதலைப் புலிகளை அழிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட சிறிய மற்றும் கனரக ஆயுதங்களின் தாக்குதல் எல்லைக்குள்ளேயே அவர்கள் இருந்தார்கள்.
இதன் பலனான பல்லாயிரக் கணக்கானவர்கள் தமது உயிர்களை இழந்தார்கள்" எனக் குறிப்பிட்டார்.
போர் இடம்பெற்ற பகுதிக்குள்ளிருந்தே இது தொடர்பான நம்பத்தகுந்த தகவல்கள் தனக்குக் கிடைத்ததாகத் தெரிவித்த கோர்டன் வைஸ், இருந்த போதிலும் அது தமிழ்ப் பொது மக்களிடமிருந்தோ அல்லது போராளிகளிடமிருந்தோ கிடைத்த தகவல் அல்ல எனவும் குறிப்பிட்டார்.
"அனைதுலக நாடுகளைத் தவறாக வழிநடத்தக்கூடிய தவறான பல தகவல்களை அரசாங்கம் வெளியிட்டது" எனவும் இந்தப் பேட்டியின் போது வைஸ் குற்றஞ்சாட்டினார்.
முல்லைத்தீவுப் பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ள பொது மக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டதாக போர் முடிவுக்கு வந்த பின்னரே சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
1 comment:
நாம் எத்தனை மலையாளிகளை கழுத்தை பிடித்து தள்ளுகிறோம் என்பதில்தான் நமது வெற்றி உள்ளது
Post a Comment