இலங்கையில் தமிழீழ  விடுதலைப்புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற யுத்த சூழலின் போது ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்க்ஷவுக்கும் கருணாநிதிக்கும் இடையிலான உறவு விரிசல் அடைந்து  காணப்பட்டது. தற்போது இவர்கள் இடையே மிக நெருக்கமான உறவு காணப்படுவது  பல்வேறு தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.அரச தகவல்களின்படி  கருணாநிதிக்கும் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் தொலைபேசி வழி  உரையாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன.தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதிக்கும்  இலங்கை ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான இந்த உறவினை கலைஞரின்  மகள் கனிமொழி ஊடாகவே தொண்டமான் சாத்தியமாக்கியிருக்கிறார்.தமிழ்  நாட்டிலுள்ள பாடசாலைகளில் ஜனாதிபதி ராஜபக்ஷவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட  நாள்காட்டி விநியோகிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட  அரசியல்கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய  ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும்  அதற்குப் பின்னரும் மஹிந்த ராஜபக்ஷ என்ற பெயரைக் கேட்டாலே அனைவரும்  கோபத்தினை வெளிப்படுத்தும் ஒரு தன்மையே தமிழ்நாட்டில் காணப்பட்டது. ஆனால்,  இன்று ராஜபக்ஷவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாள்காட்டிகளைப் பாடசாலைகளில்  விநியோகிக்கும் அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது. மேலும், இதுபோல்  நாள்காட்டி விநியோகிக்கப்பட்டதை எதிர்த்து வீதிக்கிறங்கிப் போராட்டம்  நடத்தியவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதும் தெளிவான செய்தியினைச் கூறி  நிற்கிறது. போர் தீவிரம் பெற்றிருந்த காலப்பகுதியில் மகிந்த அரசுக்கு  எதிரான போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர் வேறு யாருமல்ல, தமிழ்நாட்டு  முதல்வர் கருணாநிதிதான். ஆனால் இன்று மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ்நாட்டு  முதல்வர் கருணாநிதிக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் நெருங்கிய உறவு  பலருக்கு அதிசயமாகியிருக்கிறது. இவர்களுக்கிடையில் இந்த உறவு ஏற்படுவதற்கு  இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் எஸ்.தொண்டமான்தான் காரணகர்த்தாவாக  இருந்திருக்கிறார்.அண்மைய காலங்களில் அடிக்கடி தமிழ் நாட்டுக்குப் பயணம்  செய்த தொண்டமான் கருணாநிதியைச் சந்தித்து அதிபர் ராஜபக்ஷவின் தகவல்களைப்  பரிமாறியிருக்கிறார். இப்படித்தான் இவர்களுக்கிடையிலான உறவு ஆரம்பமானது.  குறிப்பிட்ட சில அரச தகவல்களின்படி கருணாநிதிக்கும் மஹிந்த ராஜபக்ஷவிற்கும்  இடையில் தொலைபேசி வழி உரையாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன. தமிழ்நாட்டு  முதல்வர் கருணாநிதிக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான  இந்த உறவினை கலைஞரின் மகள் கனிமொழி ஊடாகவே தொண்டமான்  சாத்தியமாக்கியிருக்கிறார். கனிமொழிக்கும் தொண்டமானுக்கும் இடையில்  நெருங்கிய நட்பு இருப்பதாகத் தெரிகிறது.கடந்த ஆண்டு தமிழ்நாட்டு நாடாளுமன்ற  உறுப்பினர்களின் குழுவொன்று இலங்கைக்கான சுற்றுப் பயணத்தினை  மேற்கொண்டிருந்தது. இந்தக்குழுவில் அங்கம் வகித்திருந்த கனிமொழியும்  இலங்கையின் வடக்குப் பகுதிக்கு வந்திருந்தார். இதனைத் தொடர்ந்துதான்  கனிமொழிக்கும் தொண்டமானுக்கும் நட்பு ஆரம்பித்திருக்கிறது. இதற்கு முன்னர்  கருணாநிதியும் அவரது மகள் கனிமொழியும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே  செயற்பட்டுவந்தார்கள். போர் முடிவுக் கட்டத்தினை நெருங்கியிருந்த வேளையில்  மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான கருத்துக்களை இவர்கள் இருவரும் வெளிப்படையாகவே  வெளியிட்டு வந்தார்கள். இதன்போது விடுதலைப் புலிகள் அமைப்பினையும் அதன்  தலைவர் பிரபாகரனையும் ஆதரித்து மாநிலம் தழுவிய போராட்டங்களையும் கருணாநிதி  ஒழுங்கு செய்திருந்தார். எல்லாவற்றையும் விட விடுதலைப் புலிகளின்  அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.பதமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது அவரது  நினைவாக கருணாநிதி கவிதை ஒன்றையும் எழுதியிருந்தார்.போர் முடிவுக்கு வந்த  பின்னரும் கூட இலங்கை அரசு அகதிகளை மோசமாக நடத்துகிறது எனக் கூறி  கருணாநிதியும் மகள் கனிமொழியும் பல்வேறு அறிக்கைகளை விடுத்திருந்தார்கள்.  போர் முடிவுக்கு வந்த சில மாதங்களின் பின்னர் கருணாநிதி விநோதமானதொரு  அறிக்கையினை விடுத்திருந்தார். இலங்கையினது வடக்கு மற்றும் கிழக்குப்  பகுதிகளில் அரசியல் தீர்வு முன்வைக்கப்படவேண்டுமெனில் மகிந்த ராஜபக்ஷவுடன்  பேச்சுக்களை மேற்கொள்வது அவசியமானது என கருணாநிதி அந்த அறிக்கையில்  குறிப்பிட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பணி செய்யாமல் தீர்வு  எதனையும் கொண்டுவரமுடியாது என்றார் அவர். கருணாநிதியின் இந்தத் திடீர்  மாற்றம் பலதரப்பட்ட மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால்,  கனிமொழி ஊடாக மகிந்தவிற்கும் கருணாநிதிக்கும் இடையில் தொண்டாமானின்  கடுமையான உழைப்பின் பயனாகக் கொண்டுவரப்பட்ட "உடன்பாடு" பற்றி அறிந்தவர்கள்  கருணாநிதியின் இந்த அறிக்கை தொடர்பில் அதிர்ச்சியடையவில்லை. இந்த  உடன்பாட்டின் பின்னர்தான் இலங்கையின் வடக்கு, கிழக்கில் அகதி முகாம்களில்  தங்கவைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களின் நிலை தொடர்பாக நேரடியாக அறிந்து  கொள்வதற்காகத் தமிழ்நாட்டு சட்டசபை உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கைக்குப்  பயணம் செய்தது. இந்தக் குழுவில் கனிமொழியும் அங்கம் வகித்தார். தமிழ்நாட்டு  சட்டசபை உறுப்பினர்களின் இலங்கைக்கான பயணத்தின் இறுதிக் கட்டத்தினை  அடைந்தபோது கருணாநிதி மகிந்தவின் நண்பனாக மாறினார். போர் இடம்பெற்ற  காலப்பகுதியில் தமிழ்நாட்டில் இறுதியாக இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெறும்  நோக்கில் கருணாநிதி மஹிந்த எதிர்ப்பு நிலைப்பாட்டினையே எடுத்திருந்தார்.  அந்தத் தேர்தலில் கருணாநிதி பெருவெற்றியினைத் தனதாக்குவதற்கு அவர் மஹிந்த  எதிர்ப்பு நிலைப்பாட்டினை எடுத்ததும் ஒரு காரணம். ஆனால், தமிழ்நாட்டில்  சட்டசபைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தமிழர்களது விடயத்தினைக்  கையிலெடுக்கும் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தனது வாக்குவங்கியினைப்  பலப்படுத்திவிடக்கூடும் என்ற அச்சம் கருணாநிதிக்குத் தற்போது  எழுத்திருக்கிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டிலுள்ள பாடசாலைகளில் அதிபர்  மகிந்த ராஜபக்ஷவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாள்காட்டிகள்  விநியோகிக்கப்படுவதற்கு கருணாநிதி அனுமதித்திருக்கிறார் போலும். தனது  அரசியல் சாணக்கியத்தைப் பயன்படுத்தியே மஹிந்த ராஜபக்ஷ கருணாநிதியினை  வென்றிருக்கிறார். அதே சாணக்கியத்தினையே ராஜபக்ஷ ஐ.நாவினது செயலாளர் நாயகம்  பன் கீ மூனுக்கும் பிரயோகித்திருந்தார். மஹிந்தவினது இராஜதந்திர  முனைப்புக்களின் விளைவாகவே பன் கீ மூன் தான் அமைத்த வல்லுநர்கள் குழுவினைச்  சிறிலங்காவிற்கு அனுப்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் எனச் சிலர்  கூறுகிறார்கள். மஹிந்தவின் சாணக்கியத்திற்குப் பலிக்கடாவான அடுத்த நபர்  கருணாநிதியா? இல்லையா? என்பது தமிழ்நாட்டில் இடம்பெறவுள்ள மாநிலத்  தேர்தல்களின் பின்னர்தான் தெரியவரும்.
நன்றி: யாழ் உதயன் 

 
 
 Posts
Posts
 
 



 
 


1 comment:
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
Post a Comment